சனி, 19 மே, 2018

அடுத்த வருடம் யெருசலேமிலே!

ஆப்ரேஷன் ஜெயசூரியா, சிங்கள ராணுவம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது, ஆனையிறவு வீழ்ந்தது, யாழ் குடாநாடு சிங்கள ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது இப்படியான நாளிதழ் செய்திகளில் தினமும் காலை தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு பெரியப்பா வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுவிடுவேன், காலையிலேயே பெரியப்பா பேப்பரை படித்து முடித்ததற்கு அறிகுறியாக இரண்டாக மடித்து ஃபோன் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும், காலையில் பார்த்த அந்த தலைப்பு செய்திகளை சாய்ங்காலம் வந்ததும் அங்குலம் விடாமல் படித்துவிடுவேன். பெரியப்பா மிக பெரிய ஈழ ஆதரவாளர், புலிகளின் ஆளுமையை சிலாகித்து பேச கூடியவர், அப்போது புலிகள் பெரும் பின்னடைவில் இருந்தனர், ஆனால் பெரியப்பாவின் முகத்தில் சிறு சஞ்சலம் கூட தெரியாது காரணம் அவர் ஈழத்தமிழரின் திறனில் அபார நம்பிக்கை கொண்டவர். ஒரு நாள் 
சாயங்காலம் புலவர் ஒருவர்  பெரியப்பாவை பார்க்க வந்தார், அவர் தமிழ் தேசிய உணர்வாளர், போரை பற்றிய பேச்சு வந்தது, அங்க சூழ்நிலை ரொம்ப மோசமாகிட்டே வருதுங்க, நாம இங்கேருந்து ஏதாவது செய்யனும்னு பாக்குறோம் என்று சொன்னார். ஒன்பதாவது படித்து கொண்டிருந்த சிறுவனான நான் இதையெல்லாம் ஓரமாக உட்கார்ந்து கேட்டுகொண்டிருந்தேன். அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க, பாருங்க நம்மாளுங்க திருப்பி அடிப்பாய்ங்க என்று பெரியப்பா மறுத்து சொன்னார்.

பெரியப்பா சொன்னது போலவே, புலிகள் ஆப்ரேஷன் ஓயாத அலைகள் சமரில் அடித்து நொறுக்கினர், வீழ்ந்த இடங்கள் பலவும் ஆனையிறவு உட்பட மீண்டும் தமிழர் வசம் வந்தது. பெரியப்பாவிடமிருந்து சிறிது சிறிதாக தெரிந்து கொண்ட விஷயங்களே பின்னாளில் ஈழ போராட்டத்தை பற்றிய முழு சித்திரத்தை படித்து தெரிந்து கொள்ள உந்தியது
இத்தனைக்கும் பெரியப்பா பெரிதாக எதையுமே 
வெளிக்காட்டி கொள்ளாதவர், அங்கே இங்கே என எப்போதாவது சொல்வது தான். ஆர்வத்தோடு தேடி படித்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. பெரியப்பாவோடு தமிழ் தேசியம் பேசிய சிலர் கொண்டுவந்து கொடுத்த பத்திரிக்கைகள் சில சமயம் மேஜை மீதிருக்கும், அதை அவ்வப்போது அவருக்கு தெரியாமல் எடுத்து வாசித்ததன் விளைவே எனக்கு தமிழ் தேசியத்தின் மீதான ஈடுபாட்டினை அதிகரித்தது

பெரியப்பா கல்லூரி காலங்களில் அன்றைய இடதுசாரி - திராவிட புரட்சிகர கருத்தியல்களின் ஊடே தன் அரசியல் சார்பினை வளர்த்துக்கொண்டவர். 1950-60களில் உண்டாகிய உலகளாவிய லட்சியவாத சிந்தனையோட்டங்களின் தாக்கம் அவரின் இறுதிகாலம் வரை இருந்தது. அவரது இளமை காலத்தில் திமுக தலைவர்கள் லட்சியவாத முனைப்பு கொண்ட அவரை போன்ற தமிழ் இளைஞர்களின் ஆதர்சம். அதனால் அவருக்கு திமுகவின் மீதும், கலைஞரின் மீதும் இயல்பாகவே ஒரு மதிப்பிருந்தது

மே 18, 2009  மதிய நேரம் தம்பி தினேஷும், பெரியப்பாவும் தொலைக்காட்சி செய்திகளில் ஈழ இறுதி போரின் கோரத்தினை பார்த்தனராம், அந்த நிமிடங்களில் பெரியப்பாவின் மனதில் என்ன தோன்றியிருக்குமோ தெரியாது. ஆனால் ஈழ இறுதி யுத்ததிற்கு பின் கலைஞரின் மீதும் திமுகாவின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கை சுத்தமாக உடைந்தது என்பது நான் அவரிடம் அதை பற்றி விசாரித்த போது புரிந்துக்கொண்டேன். பெரியப்பா போன வருடம் மரித்தார், இந்த வருடம் மே 18 நினைவு நாளில் தமிழீழமும் தமிழர் இனவழிப்பும் எவ்வளவுக்கு நினைவு வருகிறதோ அவ்வளவுக்கு பெரியப்பாவும் நினைவுக்கு வருகிறார். எனது தமிழுனர்வுக்கு முழுக்காரணமும் பெரியப்பாவின் சிந்தனைகளின் தாக்கமே. எனது பெரியப்பா போன்ற மாமனிதர்கள் தமிழீழம் எப்படியும் அமைந்து விடும் என்று பேர் அவா கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் ஈழம் ஒன்றும் எமது ஊரல்ல, ஆனால் அது எமது இனத்தவரின் ஊர், எம் மக்களின் ஊர் எனும் உணர்வு. அவர்களின் கண்முன்னே பொசுங்கிய கனவு, எப்படி ஒரு பதைபதைப்பு இருந்திருக்கும். பெரியப்பா அடிக்கடி யூதர்களை பற்றி குறிப்பிடுவார், ஃஸயோன் இயக்கம், தியோடர் ஹெர்சல், இரண்டாயிரம் வருட கனவு, ஒவ்வொரு வருடமும் யோம்கிப்பூர் என்ற (யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட சோக நினைவு நாள்) நிகழ்வின் போது தாம் என்றாவது ஒரு நாள் மீண்டும் ஜெருசலேம் செல்வோம் என்று கருத்துள்ளஅடுத்த வருடம் ஜெருசலேமிலே!” பாடலை பாடி தம் அடுத்த சந்ததிகளுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தனராம் இரண்டாயிரம் வருடங்களாக, அதன் பின்னால் 1948ல் இஸ்ரேல் ஒரு தேசமாக உருவாகியது, என்று எத்தனையோ தகவல்கள் சாதாரண பேச்சிலேயே வந்து விழுந்தவை. உண்மையில் பெரியப்பா மற்றோர் இனத்தின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் சொல்லி சென்றிருக்கிறார். எம் பிள்ளைகளுக்கு அவர் எங்களுக்கு சொன்னது போன்றே சாதாரண பேச்சில் சொல்லி கொண்டிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளானாலும் மறக்க கூடாது என்பதற்காக, ஏதேனும் ஒரு வகையில் எதிர்கால சுதந்திர தமிழீழத்திற்காக எம் பெரியப்பாவின் பங்களிப்பும் (அவர் சிந்தனையின் தாக்கத்தினால் உருவான எங்களாலோ அல்லது எம் சந்ததிகளாலோ மிகச்சிறு அளவினேனும்) இருக்கும் என உளமார நம்புகிறேன்.

இனி வரும் எல்லா மே 18டும் ஈழ போராட்டத்தின் நினைவுகளோடு பெரியப்பா எனும் மாமனிதரின் நினைவுகளும் சேர்ந்தே இருக்கும்.

அடுத்த வருடம் யெருசலேமிலே... அடுத்த வருடம் யெருசலேமிலே...!!!”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக